Wednesday 27 March 2024

இன்னும் ஒன்று

இரவினை முடிக்கும் உரையாடல் நீ

காலை பனியின் எழுகுரல் நீ

இத்தனை சரளமாய் 

எழுதும் தமிழும் நீ

ஏதோ இழந்து அலைகிறேன்

என் தேடலின் முடிவும் நீ.


வானத்தின் எடை கூடினால்

பெரு மழை பெய்யும்

உன்னை காணாது இருக்கும்

பெரும் பாரம் தனை

எதை கொண்டு பொழிவேன்.


நீ என்பது என்னுள் எழும் உணர்வு

நாசியினில் புகும் வாசம்

கனவினில் கேட்கும் கொலுசு.

மாதம்தோறும் உன் நகல் வேண்டினேன்

சத்தியமான இறைவனும் 

செவி சாய்க்கவில்லை இன்னும்.


இந்த வரிகள் 

உனக்குள் இறங்கவில்லை எனில்

என்னிடமே கேள்.


ஒளியென்பது 

சிலருக்கு அகல் விளக்கு

சிலருக்கு மின்குமிழி

சிலருக்கு மின்மினி


தீதும் நன்றும்

பிறர் தர வரா

காதல் நீ அன்றி எவர் தருவார்?

No comments:

Post a Comment