Wednesday 20 December 2017

AMD (அன்பின் மடல் -தீபிகா )

யாரும் அனுகிடா issue வென தனித்திருத்தேன்
நீ என் SO(U)LMAN என
இது வரையில் எப்பெண் சொல்லி கேட்டதில்லை
காதலின் கால் தவத்தினை கடவுளிற்கு escalate செய்தேன்
என்னை உனக்கு assign செய்தார்.

மே மாதம் மனதின் சேர்மானம்
ஜவ்வரிசி சிரிப்பழகியின் உள்ளம் சேர்ந்திடும்
GRC தேடல் இன்னும் ஓயவில்லை
பல வருடம் develop செய்தும்
உள்ளத்தை காட்ட test case இன்றி தவித்தேன்
compliance இல்லா CAB-ஆய் இசைந்தாய் நன்றி.

என் செல்லம் ஆய்ந்திடும் appraisal ற்கு
விடை சொல்லும் resolution என்னிடமில்லை
அவள் கரம் பிடித்த நொடியில்
இனி வரும் காலம் task அனைத்தும் எனதாகும்.

உடனில்லா காலை கொடும் பகல் குளிர் இரவென
முக்காலம் 3 Reminder-யாய் உன் பிரிவு சுடுகிறது
உன் முத்தங்கள் கொள்வதற்கென
இதயத்தின் sharepoint இன்னும் காலியாய் கிடக்கிறது
ரண்(ம்)தீர என் காயங்களில் முத்தமிடு போதும்.

உனக்கும் எனக்கும் பிணக்கெனில்
உடலோடு நிழல்யென ஒட்டிகொள்
problem ticket-ல் காலத்தை கழித்து விட்டு
முதல் படியில் நிற்க விரும்பவில்லை
இதழ் இரெண்டும் சேர்ந்த பின்
புதிதாய் இனி rootcause  எதற்கு?
உன் புன்னகை தேசதிற்கென
நான் roadmap செதுக்கிக்கொண்டிருக்கிறேன்.

மகேந்திரனிடம் அடை கொண்டிருந்த விக்கிரகமே
என்னோடு சம்மதித்து இந்த VDI-யில் connect ஆவாயா
அயல்நாட்டில் தவித்திடும் இப்பறவைக்கு
உன் உள்ளத்தினுள் நுழையும் VPN passcode சொல்லடி

இந்த sandalwood அழகிற்கு
redwood-ஆய் நில்லாமல் பணி செய்திடுவேன்
Service now-ஆக உடனிருந்து
உன் சேவைகள் ஏற்க முயல்வேன்.

Outlook-உம் அழகும் ஓர் நாள் ஓய்ந்திடும்
ஆனால் நம் காதலின் நேசம்
காலமும் அறிந்திடா SLA தூரம்
தீ நம்மை பிரிக்கும் வரை
வாழ்க்கையோடு fire fighter ஆக போராடுவோம்.

Monday 4 December 2017

கேளடி கண்மணி

கருவறை சுமந்த கதைகள் அறிவாய்
ஓர் மாலையிரவின் நீல உடையில்
நம் தோள் உரசிய நினைவுகள் உண்டு அறிவாயா?
நிலம் கொண்ட காதலுக்காக
அலைகள் கரையினில் ஓய்வதில்லை
பேசாத தருணத்தையும் திறக்காத மனதையும்
மோதிப் பார்க்கும் சீற்றத்தோடு
காதல் நோயில் இரவினை கடக்கிறேன்
என் கண்மணிகென அவை கடலினுள் உறங்குதடி

நீ பிறந்த நொடியில் அழுதது போதும்
ஆறுதல் வேண்டிய அக்கணம் இருப்பேன்
வலிகளின் மறைபொருள் நானெனில்
மறுபிறவி எடுத்தேனும்
இறைவி கண்ணீர் துடைப்பேன்

புன்சிரிப்பில் நீ காணும் கனவில்
காலத்தில் துளையிட்டு
உன் புருவந்தன்னில் போரிட்டு
நெற்றி தழும்பினில் நீர் வழிய
கண்ணீர் முத்தமிட வேண்டும்

நீ கொண்ட காதலிற்கு
நிறை என்று பதிந்திட முத்தங்கள் போதாது
உன்னோடு பேசும் கதைகளுக்கு
இந்த ஓர் வாழ்க்கை போதாது
என்னை விற்றாலும் அக்கடன் தீராது
எதனை கொண்டு ஈடு செய்வேன் உன் இதயத்திற்கு?

உன்னுடைய உரிமையென
என் அனைத்தும் ஆன பின்
தனியே தருவதற்கு என்னிடம் ஏது?
அன்பெனும் அடைமொழிக்கு
வழியெங்கும் ரோஜாக்கள் நட்டிருக்கிறேன்
என்றோ ஓர் நாள் திரும்புகையில்
நீ புன்னகைப்பாய் போதும் .

Saturday 2 December 2017

இணை

காதில் வளையமிட்டு
கன்னத்தில் கை வைத்து
கருங்கூந்தல் முத்தமிட்ட அழகே
பசும்போர்வையும் உன் பச்சிளம் புன்னகை முன்
கூச்சம் கொண்டு மறைந்தனவோ
உன் எழிலில் கரையுமென தடுப்பினை கொண்டதோ

இதயத்தின் கடவுச் சொல்லினை
காதலின் வழியே களவு கொண்டவளே
தன்னை இழந்து நீயும் அற்ற
ஒர் உலகில் இருந்து கேட்கிறேன்

"எனக்காக திறக்க மறுத்த
பல மனதின் வாசல்களில் தோற்றுவிட்டேன்
கணவனாக என் பெயர் எழுதி
இது நாள் தழுவிடாத
தாமரை கரங்களில் சிறையிடுவாயா?
உன் மேல் மையல் கொண்டவனை
"தை"யல் மருந்திடுவாயா?"

கன்னம் சிவந்து நாணம் கொள்ளும்
மயக்க மொழி அறியேன்
உன் குல பெண்கள் ஒயாஐயறும்
இலக்கண கணவனாய் நான் அறியேன்
கண் பேசி கவர்ந்திடும் கலையும் அறியேன்
என்பேசி உன்னை மணந்திட
மனம் வீசி காத்திருக்கும் ஏழை காதல்வாசி நான்

பனியில் தவித்திடும் இப்பனிப்பாடிக்கு
திங்களும் சுடுகிறது
தென்றல் கலவி கொள்ளும் அதிகாலையில்
கட்டிலில் மாரணைத்து உறக்கம் கொள்
நீரற்ற இந்த நீல நையில் நதி
உன் வெள்ளி மயில் காதோரம் உயிர் பெறும்

Saturday 28 October 2017

துடிப்பு

சிந்தைக் காட்டினில் மலர்ந்த மல்லிகை
மாலையில் மூடிடுமா?
கனவினில் உன்னை களவுகொடுத்தேன்
என் உறக்கம் தான் திரும்பிடுமா?

பாற்கடலினுள் ஆழ்ந்திருக்கும் முத்துச்சிப்பியே
முத்தம் பொழிந்து என்னுள் அடங்கு
காதலோடு அணைத்து கட்டிலில் கிடத்தி
மறுநாள் இம்சைகள் தொடங்கு.

காய்ந்த கண்ணீரிக்கு வினையான வெண்காயமே
உன் தினசரி வினாவிற்கு பதில்கேளடி
நாம் இணைவது உறுதியெனில்
என் இத்தனை கண்ணீர், அத்துணை துடிப்பு?

துணைவியே திருமணம் நம் இலக்கல்ல
வாழ்க்கைப் பயணம்!
குருதி ஓடி உயிர் வாழ்ந்திட
இதயம் துடித்தாக வேண்டும்
இன்றைய தேன் கிடைத்ததென
நாளை தேனீ நின்றிடுமா?

ஓட்டத்தின் ஒரு பகுதி விளக்கு
இன்று உன் கையினில் கொடுத்தேன்
காவிரி கரை கொண்டால் திருச்சி
காதலிற்கு தேவை உன் எழுச்சி
குழல் கூடி காற்றினை இசைத்திடுமா
மனதால் நம் கூடல் இசைந்திடுமா?

இந்த ஓட்டம் நாம் கொண்ட காதலானது
உனக்காய் வடிக்கும் கவிதையானது
மூப்பும் முதிர்வும் கொள்ளும் வரை
மூன்னோடும் இப்பயணம்.

ஓட்டத்தின் களைப்பில் சாய்ந்திடும் மடியாய்
இருவரும் தாங்கிக் கொள்வோம்
நம் காதலின் கடினம்
கடவுளையும் கரைத்திடுமெனில்
கரை கொள்வோம் நூறாண்டு காலம்.

Tuesday 24 October 2017

மெய்யன்பு

நடு ஜாமத்தில் திரிந்திடும்
தனிமை தென்றலே
என் காதலின் வலி கேட்பாயா?

மற்றொரு தருணம் அறிந்திடாத பொழுது
உடனிருப்பதாய் சத்தியம் செய்தவள்
கண்டங்கள் கடந்த பின்னும்
எனக்காக விழித்திருந்தவள்
இன்று கேட்கிறாள்
என் காதலின் மெய்நிலை கணக்கு.

பாதையில் ஐயமெனில்
சேரும் வழி பிணக்கு
கனவினில் ஐயமெனில்
விழியினில் தூக்கம் குறுக்கு
அவளுக்கு என் காதலே ஐயமெனில்
இன்னும் இவ்வுயிர் எதற்கு?

அவளை தேடி வந்ததும்
என் காதல்
தாய்மையாய் நெஞ்சினில் சுமப்பதும்
என் காதல்
தழுவாது பிரிந்து புன்னகையிழந்து நிற்பதும்
என் காதலே

என்னை வினவும் முன்
ஒரு கணம் கூர்யிட்டு கிழித்திருக்கலாம்
மனம் தவித்திடுமுன்
உடல் மரித்திருக்கும்

போதும் தென்றலே
உடல் சார்ந்த வலியும்
சுடும் தீ தனிமையும்
ரணம் கிழிக்கும் கேள்விகளும்
என்னுடனே மறைந்திடட்டும்
உறங்கும் விழிகளும்
உள்ளத்து அமைதியும்
என் காதலிக்கு உரித்தாகட்டும்!

Tuesday 19 September 2017

குளிரே பதில் கூறடி

உன்னை பிரிந்த துயரமும் சோர்வும்
எம்மை தீயின் நா கொண்டு தீண்டியதடி
என்னை மட்டும் கூராய் சுட்டிடும் காதல்
உனக்குள் தொற்றிட வில்லையா?
தீயினில் காய்வது எம் குணம்
குளிரினில் ஒய்வது
எம் துணைவி குணம்.

குளிரின் குறிப்பு குறையில் கொள்ளும்
உன்னுள் இறங்கிடா உணர்வாய்
உன்னோடு கழிந்திடாத வாழ்வாய்
உன் அறிவொளி அறியா கழையாய்
நம் காதலின் குறையாய்
என்றும் எனை நிரப்பிக் கொள்கிறேன்.

குளிரின் தன்மை பற்றிக்கொள்ள
எந்நாள் தன்னை எரித்திட வேண்டும் தீ?
எரியும் பொருள் ஏங்கிக்கொள்ள
உறை நிலையாய் உறங்க செல்வாயா
அல்லாது உன் நிலை உன்னதமென
இக்கரித்துகளை கறைய சொல்வாயா?
தனிமை தீயிற்கு குளிரின் வைப்பென்னவோ


Wednesday 6 September 2017

வெள்ளி மயில்

தனிமை தான் எத்தனை ரணம்
நம் உறவிற்கு அத்துணை பலம்
நேற்றைய வலியினை
இன்றைய கனிவோடு சொல்ல துடிக்கிறேன்
காலமில்லை உன்னிடம்

மறையற்ற மனம்
என்னிடம் திண்ணம்
உன்னை மணம் கொள்வதே
அதன் எண்ணம்

எம் மனமும் கவியும்
உன்னிடம் திறந்தே இருக்கும்
அறியா புதினம் நம்மிடயே இருப்பின்
அது உன் மனம் பொருந்தா இடமாக இருக்கும்
பல்லறிவு கொண்டவள் பற்றிகொள்ள
எம் மொழி பற்றவில்லையோ தோழி ?!

எத்தனை திங்களாய் காக்க வேண்டும்
செவ்வாயில் இதழ் கோர்த்து முத்தம் பொருத்திட
கமையிழந்த சுக்கிரனாய் உக்கிரனாய்
வெள்ளி மயில் காதோடு
காதலை சொல்வேன் ஓர் நாள்
அக்காலம் கூடுமடி என் துணைவி
அப்பொழுது வரை காத்திருக்கிறேன்

Thursday 3 August 2017

வலியில் வழி வைத்து

வாழும் வரை நீயடி
நம்மை வாழ்த்த வழி சொல்லடி
இருப்பில் கால்கள் வைய்யடி
நீ இல்லா கனவுகள் ஏதடி?
ஈடன் தோட்டத்து மலரும் நீயடி
நம் வனத்திற்கு கண்ணீர் பூக்கள் ஏனடி?
என் கதவுகள் மூடிக்கொள்வதினால்
காதல் மொழியின்றி தவிக்கறேனடி
ஆயிரம் விளக்குகள் எரிந்தென்ன லாபம்
வழியறியா விழிகளுக்கு
ஒளி வெள்ளம் எதற்கடி?
என்னோடு வருகையில்
முள்ளாய் வார்த்தை கொட்டுமடி
நம் உறவே நிலைக்காதென
உலகம் சிரிக்குமடி
வசந்தமற்ற வனத்தின் தேனீ(நீ)யே
உனக்கான பூங்காவனம்
தனியே உள்ளதடி
யாரும் பார்க்காத கவிஞன் நான்
ஊரே மெச்சும் கவிதை நீ
உன்னை படிக்கும் கண்களோ கோடி
நீ செல்லும் பாதையும் தூரமடி
இத்தனை கண்ணீரும் உனக்கெதற்கடி
செல்லமே!!


Monday 31 July 2017

உயிரெழுத்து

அன்பிற்குரிய காதலி
ஆசையில் ஒரு முறை அணைப்பாயா
இதயம் முழுதும் நீயடி
ஈர் உடல் ஓர் உயிர் நாமடி
உயிரில் கலந்த எரிமலை தீயே
ஊரறிய மணமுடிப்பதெங்கே?
எங்கு காணினும் கனவாய் உன் முகம்
ஏங்கும் மனதிற்கு ஆறுதல் எங்கனம்?
ஐயம் பயக்கும் பிரிவினை ஆயிரம்
ஒரு முறை தீர்வாய் ஆழ்ந்த முத்தம்
ஓர்மை கொள்ளும் இருமை விலகிடும்
ஔவை வயதிலும் (நம்) நேசம் நிலைத்திடும்
இ ஃ து உறுதிமொழி அல்ல உயிரெழுத்து.

Friday 28 July 2017

காதல் உறவே

உன்னோடு இதழ் கொண்டு
பேசா காதல் தனை
ஏதோ ஓர் மௌனமான பொழுதினில் காற்று கரை சேர்த்திடுமா

தீரா காதல் நீயல்லவா
பிரிந்திடா சொந்தம் நமதல்லவா
காதல் கூடிடும் திருநாளும் வருமா
தனிமை என்னை வாட்டுதடி
என் ப்ரியமான டெட்டி 

Thursday 6 July 2017

பேசாமொழி

மரணத்தின் வலி யாதென
அறிவாயா தோழி
மௌனத்தின் பிறப்பிடம்
நீ அற்ற வெற்றிடம்.

ஆற்றங்கரை மணல் முழுதும்
நம் காதல் எழுதியிருந்தேன்
தண்ணீரில் நனைவது போல்
(உன்) அலட்சியம் அத்தனையும் அழிக்கிறதே.

எனக்கென்று மட்டும் உணர்வுகள் இல்லையா
என தடுத்திடாதே தலைவி
கான் கடந்து கண்ணீரும் வற்றி
பாலையில் காய்ந்து கொண்டிருக்கிறேன்
என்னிடம் இதற்கு மேல் வார்த்தைகள் இல்லை
எனக்கென்று பேசிட
உன் கெடிகார முட்களுக்கும் நேரமில்லை.

தீயில் முடிவதல்ல மரணம்
பிரிந்து செல்லென தலைவியில் மொழியில்
காத்திருக்கிறேன் இறுதி வரை
தோழனாக தலைவனாக கணவனாக
என்றோ ஓர் நாள் உனக்கு புரியுமென!

காத்திருக்கும் பொழுதினில்
காலன் என்னை கொண்டு விட்டால்
என் கல்லறையிலேனும்
கொஞ்சம் மனம் விட்டு பேசிசெல்

Monday 26 June 2017

துணைவி

தீது அறியா சிறியவள்
பிறந்த மழலை நகையுடை இனியவள்
காத்திருக்கா மனமே
இனியெல்லாம் அவள்.

யாரும் அருகா எரிமலை சிகரமவள்
எனக்காய் மட்டும் நிலவாய் குளிர்பவள்
இதயத்தில் தலை சாய்த்து
இமை கொண்டு
காதல் கணை தொடுப்பவள்
இருள் சூழ்ந்த மனதிற்கு
இல்லற தீபமாய் ஒளிர்பவள்.

கவிதையின் மறு வரியாய்
உயிரின் மறு பாதியாய்
அவளது நினைவுகள் இங்கே!!
மண முடித்த நன்நாளில்
சுடும் பகலை வீட்டிற்கு அனுப்பி
அவள் புடவை தலைப்பினில்
உறங்கிடும் மாலையும் எங்கே??
இங்கனம்
அவ்விரவு விடிய காத்திருக்கும்
வருங்கால கணவன்

Tuesday 13 June 2017

அவளதிகாரம்-2

சிறகு முளைத்த
சிறு பறவை நான்
புயல் காற்றில் புலம் பெயர
கூட்டை தேடி அலைகிறேன்
உந்தன் மடியில் இடம் கிடைக்குமா?

பிறந்த பொழுது
அழுததாய் நினைவில்லை
உன்னை பிரியும்
ஒவ்வொரு கணமும் அழுகிறேன்

அத்தனை கவிதைகளும்
உன்னை சேரும் முன்
கண்ணீரால் நனைந்திருப்பதை அறிவாயா?
அன்பே அருகே வருவாயா
எந்தன் வாழ்க்கை பிழைதனை அழிப்பாயா

விண்ணும் மண்ணும்
மழையால் சேர்வது போல்
உன் ஈர முத்தம்
நம்மை சேர்ப்பது எப்போது?

நீ இருக்கும் இடத்தில்
தன்னிரக்கமும் இல்லை தாழ்வும் இல்லை
உனக்காய் விழித்திருப்பதாய்
சினமும் தேவையில்லை செல்லமே
எனக்காய் அத்தனை சுமைகளையும்
சுமக்க போகிறவள் நீயடி
என் ராணியின் மலரடிகளை
இந்த மனதில் வைத்து தாங்கிடுவேன்.

நெருப்பினை பற்றும் தீக்கஞ்சியாய்
நம் இருவரையும் பிணைத்து
குளிர் காய்கிறது காதல்.


தீக்கஞ்சி- Camphor

Sunday 11 June 2017

மனைவிக்கு ஓர் மடல்-2

டிசம்பர் நான்காம் திகதி
பத்து மணியளவில்
பதிணென் மல்லிகை சரத்தில்
நட்டுவைத்த ஒற்றை ரோஜாவென
பிறை சூடிய கங்காதரன் மடியில்
பாய்தோடும் அழகிய கங்கையென
என் தேவதை பிறந்தாள்

காட்டு ரோஜாவை தேடிக் கொள்ளும்
கருவண்ண தேனீயாய் சுற்றி வந்து
அவள் மனதினை கவர்ந்தேன்

சூறை காற்றில் தோற்றிடும்
மலர் மொட்டுகளை போல்
பூங்கொற்றில் சிரித்திடும் ஒற்றை மலர்
அவள் பால் மனம் சாய்ந்ததே

இருளடைந்த வான் நான்
முழு நிலவே எனை விலகி செல்லாதே
யார் முகம் நோக்கினும்
உன்னோடு மட்டுமே பேச தெரிந்த
மழலை நான்
மற்றோர் முகம் காண சொல்லி
தீவாய் பிரித்து காட்றாற்றில் விடாதே
எங்கேயோ உடைந்து போகும் இப்படகு

பிரிய சகியே
உன் மேல் எத்தனை காதல் தெரியுமா
அயர்ந்த விழிகள் உனக்காய் மட்டும்
விழித்திருந்து கனா காணும்
இதழ்கள் உனக்காய் மட்டும்
முத்தம் பொழியும்
இதயம் உனக்காய் மட்டும்
வாசல் திறக்கும்
மற்றோர் பாதை கூட செல்லாது
என் மனதை நீயே சிறை வைத்திருக்கிறாய்

மீண்டும் ஓர் முறை
எத்தகைய காதல் என வினவாதே
என்னை படைத்தவன் கூட
கூற இயலாது கவிதைகளில் மூழ்குவான்.

Saturday 10 June 2017

மனைவிக்கு ஓர் மடல்

தொடு திரை வழியே
      கூர்  தீட்டி
இதயம் பிளந்து
 கூடும்  காதல் நமது

இன்று பெண் பார்த்து
இரண்டு நாள் கழித்து கடிதம் போட்டு
வாய்த்த பொருத்தம் நமதில்லை

உன் கண்கள் மூடி
மெழுகின் ஒளியில்
பூக்கள் வீசிடும் கணவனில்லை

கை சுட்டு நீ செய்த
ஆசை சமையலின் ருசி பார்த்து
உச்சி முகரும் கணவனில்லை

இன்னது உனக்கு பிடித்தவை
இங்கே இவள் புன்னகை
இதோ இவளது கனவுகளென
தேடி கோர்க்கும் கணவனில்லை

உலகின் இறுதி அழகி நீயென
அங்கராகம் அற்ற அழகு விசையினை
வர்ணித்து வடிக்கும் கவிஞனும் நானில்லை

உன் காதலுக்கென
தகுதிகள் இல்லாவிடினும்
ஏனடி என் மேல்
இத்தனை காதல் உனக்கு

என் கவிதைகள்
நீ சூட பிறந்த மலர் மாலைகள்
என்னை செதுக்கும் சிலைக்கு
உடைந்த சிற்பியின் வரிகள்
நாளை நீ எதிர்நோக்கும் கணவனாக
இன்று மாற துடிக்கும்
காதலனின் அன்பு மடல்


Thursday 8 June 2017

என் இனிய ஹைக்கூ

புடவை தலைப்பினில்
என்னை சிறையிட்ட அழகியே
உன் விழியில் விழுகையில்
ஆயிரம் வெட்கம் வருகிறதே
ஆசை கவி வரைகிறதே

விடிந்த பின்னும்
விலகாத கனவே
உன் தீயில் பற்றிக்கொள்ளும்
காதல் கடிதம் நான்
எரிந்த காகிதத் துகளும்
உன் அணைப்பில் வைரமாகுதே

உலகின் ஓரம் சாய்ந்து
என்னை இசைத்திடும் புல்லாங்குழலே
தீ பிடித்த காட்டினில்
பனி துளி உறங்கிடுமா
கணவா என அழைத்திடும் பொழுதிற்கு
காதல் பொறுத்திடுமா?

காவியங்கள் தோற்றிடும் வடிவே
என் இனிய ஹைக்கூவே
திருமண விரலில்
எப்பொழுது
மோதிரம் கோர்க்க காண்போம்




Tuesday 23 May 2017

என் அருமை காதலி-2

அவசரம் அவசரம்
அத்தனைக்கும் அவசரம்
இக்கணம் முதல் நிதானமாய்
காதல் பயின்றிட அவசரம்
கடல் கடந்து காலம் மறந்து
கட்டியணைத்திட அவசரம்
நான்கு கண்கள் கலந்து
ஒற்றை காட்சி காண்டிட அவசரம்
சுருள் முடி கொண்டாள்
தலை கலைத்திட அவசரம்
பிறை நிலா நெற்றியில்
முத்தம் பதித்திட அவசரம்
உன் ஆசை தீ எனக்காய்
ஒளிர்ந்திட அவசரம்
யாருமற்ற காட்டினில்
நம் பெயர் உரைக்க அவசரம்

உனக்கான காதலை
பதிந்திட அவசரம்
நம் காதல் கவிதைகளை
நீ எழுதிட அவசரம்
நீ எனக்கானவள் என
சுற்றம் அறிந்திட அவசரம்
நம் மணமுடிப்பதை
நட்பிற்கு சொல்லிட அவசரம்
வானூர்தியில் இறங்கிய கணம்
வாழ்க்கை வாழ்ந்திட அவசரம்
நாம் நச்சயித்த நொடியில்
பெற்றோர் கண்கள் பணிந்திட அவசரம்
இவர்கள் மணமக்கள் என
அழைப்பிதழ் பதிந்திட அவசரம்

திருமண பொழுதினில்
உன் விழி நீரை துடைத்திட அவசரம்
காலம் முழுதும் கரம் பிடிப்பேன் என
தீபம் முன் உறுதிட அவசரம்
நம் திருமண வாழ்க்கை தனை
தேவர்கள் வாழ்த்திட அவசரம்
கட்டிலில் ஆடை களைந்து
பிறந்த மழலைகளாய் முத்தமிட அவசரம்
தாயான உனை
மடியில் தாங்கிடும் அவசரம்
என்னையும் சேர்த்து
மூன்று பிள்ளைகள் பெற்றிட அவசரம்
முப்பது ஆண்டுகள் கடந்த பின்னும்
காதல் கவிதை எழுதிட அவசரம்

என் வேகம் தனை தனித்து
நிதானம் அருள்வாயா
என் அருமை காதலி?

Saturday 20 May 2017

என் அருமை காதலி

தனியே இருக்கும் ஒற்றை தோணி
காதல் கொண்டால்
கரையினை கடக்கும்
கண்கள் உன் மேல் மையல் கொண்டால்
கலங்கும் நெஞ்சமும்
கவிதை கொள்ளும்.

சிறகு விரிந்த என்
கவிதை மழலைகள்
உன் மடி தேடி
தஞ்சம் கொள்கிறது.

களவாடிய கனவுகளை புன்னகையுடன் நிரப்பி தா
இங்கே உறக்கம் இன்றி தவிக்கிறேன்
நிஜமென்று எண்ணி கண்ணுறங்க சென்றால்
அனைத்தும் கனவென இருள் களவாடி கொண்டால் என் செய்வேன்?

கணிணியில் முகம் கண்டால்
வரிகள் வற்றிவிடுமாம்
அயிரமாயிரம் கவிதை பேசும் விழிகளுக்கு
வார்த்தைகள் ஏதற்கடி?

உன் தோள் கொண்டு அணைக்கவில்லை
உன் தலை சாய்த்து இதயம் துடிப்பதில்லை
உன் கண்ணீர் தனை கரம் கொண்டு
எந்திடவில்லை
(எம்)இமை கொண்டு உன் விழி கோதிடவில்லை
கனவுகள் கிழித்து கலவி புரிந்திடவில்லை
இத்தனையும் இல்லாது
எம் காதலை பொறுப்பாயா
என் அருமை காதலி?

Saturday 6 May 2017

திரும்பி வா சகியே -2

ஆழி சூழ் உலகில்
ஆற்றின் துருவந்தனில் பிறந்த நம்மை
இன்று ஆழ்கடல் பிரிக்கிறது
காலத்தின் சுவரிடையே
வார்த்தை பாலம் கொண்டு வாழ்ந்தோம்
தவறிய வரிகளில்
துணை இழந்து தவிக்கிறேன் (நான்)

என் மீது சினமில்லை என கூறும்
புன்னகை துறந்த இதழ்கள்
"என்னிடம் எதுமில்லை பகிர" என முடித்து
எம்மை பிரிக்க துடிக்கும் மௌனம்
தனிமை சாலையில்
உன் துணையின்றி பிழையாய் திரிகிறேன்

உன் வார்த்தைகளை செவிகொண்டு
கேட்பதில்லை என்பது உன் குறை
உயிர் கேட்கும் ஓசை தனை
செவிகொண்டு நிறுத்துவதில்லை தோழி
நீ கதைக்கும் பொழுதினில்
இதயம் சிறகு விரிக்கும் அறிவாயா?

"நான் இன்றி போனால்
என் உடல் கரைந்தால்
காற்றோடு கலந்திட்டால் என் செய்வாய்"
என பழிக்காதே தோழி
மறந்தாலும் மறுத்தாலும்
நீ என்ற உண்மை தான் அழியுமா?
இந்த கவிதையின் ஓர்மை தான் தீருமா?
காலனென்ற பிரிவினை எதிர்கொள்ளும் வரை
என்றும் உன்னோடு இருப்பேன் தோழி

இவையனைத்தும் எம் கற்பனையென
நீ முடிக்க கூடும்
கவிஞன் என்னோடியிருப்பது
உன்னோடு கழித்த உண்மையான பொழுதுகள்
என் நிஜம் நீ
நெடுங்தொலைவு சூழ்கொண்டால்
உன் நினைவுகள் தானே என் புகலிடம்.

காட்டு தீயில் கரைந்திடா விறகா
பறவை பறந்திட மறுத்திடும் சிறகா
நட்பினுள் உன் கொடை அதிகா
மனிதருள் உன் குணம் அநகா
நீயின்றி மனம் தீகா
சொல்லின்றி மொழி பிறக்கா
சொல்லடி நீ கார்குழலி






Tuesday 28 February 2017

அவளதிகாரம்

ஒரு கை மௌனத்தில் ஆழ்ந்திருந்தேன்
இரு கரம் கொண்டு அழைத்து வந்தாள்
நிலவின் நிழலி தோற்கும்
கார்மேக குழலி ஒருத்தி

காவினில் சேர்ந்திழைத்த மாலையென
பாக்களை கோர்த்து
அவளுக்கென்று வடித்தேன்
என் வரிகள் அவளிடத்து அர்ப்பணம்.

மழை என்று சொன்னால்
பச்சிளம் கொண்டு வருவாள்
மழை தொட்ட மனதை
நான் வருடக் கூடாதா?

காகித ஓடம் கொண்டு
கண்டங்கள் கடக்க முயல்கிறேன்
வண்ணத்துப்பூச்சி இறகு கொண்டு
விண்மீன் தழுவப் பார்க்கிறேன்
ஓசை ஓதும் குழல் கொண்டு
குடிநீர் அருந்த தோற்கிறேன்.

குளிர் கொண்ட விட்டில் மனம்
வேண்டி தெரிவது ஆகிடத் தீ
தழலென தெரிந்தும்
விழுந்து மாயும் விரும்பி
நெருப்பினில் எரிகையிலும்
கொண்ட காதலில் என்றும் விலகா!

உன் தீயில் கரைகிற விறகாயினும்
என் நினைவழிந்து நிழலாகினும்
ரசம் தொலைந்த ஆடியாயினும்
வீழ்ந்து சிதறுவேன்
ஒவ்வொரு சில்லிலும்
உன் முகம் காண்டிட.

Tuesday 14 February 2017

திரும்பி வா சகியே

காழ் மனம் கொண்டவள் உன்னை
கண்ணீரில் அரியும் முன்
களூரிற்கு பறந்தாயடி கண்ணம்மா
காலத்தில் ஓர் தடம் பதிய வேண்டும்
திரும்பி வா சகியே

உன் மனா தெரிகையில்
என் மனம் கவர்ந்தாய்
இருள் மறை பூனையாய்
தேடி உன்னை தொலைக்கிறேன்
திரும்பி வா சகியே

வாட்ஸ்பில் சண்டையிட்டு
ஸ்மைலியாய் மறையும் என் நிலவே
கோளோடு யுத்தம் கொண்டு
கிரகணமாய் மறையாதே
முழு இரவும் நமக்கென விழித்திருக்கும்
திரும்பி வா சகியே

உன்னோடு கழித்த பொழுதினில்
என்னை நான் மீட்டெடுத்தேன்
இதயத்தின் காயம் வழியே
குருதியாய் வழிந்தோடினாய்
காயங்கள் ஆறுமுன்
கானலாய் கரையாதே
திரும்பி வா சகியே

எத்தனை வர்ணனை தீர்த்த பின்னும்
துளிர்க்கும் காதலாய்
வடிக்கும் வரிகள் உனக்கெனவே பிறக்கிறது
என் வாசகியே

Tuesday 10 January 2017

(மகா) கவி

மகாகவி ஆக
எத்துணை காலம் வேண்டும்?
தெரியவில்லை ....
அவளுக்கென்று
காத்திருந்த கணங்களை
எண்ணிவிட்டு சொல்கிறேன்

Saturday 7 January 2017

கற்பனை தோழி

சகடதின் சாளரம் ஓரம்
மெலிதாய் இழைந்தோடும்
இளவேனிற் சாறல்

நெரிசல் சிறையில்
சிக்குண்ட  என் காடியின் எதிரே
குளிரின் இதமாய் போர்த்திட
ஒரு உடை ஈர் உடல்
பெரு மழை தவிர்த்திட
குடையினை தழுவிம் நாற் கரங்கள்
மற்றும்
காதலின் தடுமன் தீர
கணக்கில்லா முத்தங்கள்.

தனிமையின் துவீபமான
என் குறை தீர
கற்பனை தோழி ஒருத்தி வந்தாள்
தன்னை யாதென வியக்கும்
மாமல்லன் மனங்கவர் சிற்பமவள்.

ஏ தோழியே!
கற்பனை உலகில்
தன் பலம் தந்தாய்
உன் மொழி கேட்க
தன் மடல் உள்ளது என்றாய்
தனிமை என்றோர் மாயை
அது நம்மிடம் இல்லையென
கரம் கொடுத்தாய்
கணம் பொழுதும் உன்னொடென
கணை அளித்தாய்
நினைவில் எங்கே துறக்கிறாய்?

நித்தம் உன்னோடு வாழ்த்திட
அடைக்காக்கும் என் இரவுகள்
உன்னிடம் சொல்வதிற்கென
பல புனைவுகள் இருக்கிறது
உன்னிடம் தீர்த்து கொள்ள
பல யுத்தங்கள் இருக்கிறது
உன்னோடு களிக்க
பல அதிசயங்கள் இருக்கிறது.

மற்றோர் திகதி உன்னோடென்று
கனவில் மறக்கிறாய் நேற்றோடு
உன் சிறகு விரிய காத்திருக்கிறேன்
அரவணைத்து கொள்.