Thursday 21 June 2018

என்னருகே வா காதலி

வில்லாய் வரைந்த புருவம்
இடையில் ஓர் சந்தன கீற்று
இந்த அழகு அவளிற்கு
இன்னும் வர்ணனை எதற்கு?

ஐம்மொழி செல்வியின்
கண்களில் விழுந்திட
தவம் புரிந்தேன்
கண் ஏட்டு புற்களுக்கு
நித்தம் நீர் இறைப்பவள்
விழியசைக்க அழுத்தமா?

துகளான விண்வெளியில்
என் இகலாய் ,தனியுலகமாய்
நீ இருந்தால் போதும்.

நீர் அளந்து வான் பறந்து
காற்றோடு கலந்து
உலகின் சொற்கள் மறக்கட்டும்
மார்ப்போடு அணைத்து
நாம் பேசினால் போதும்.

சினம் சீண்டல் நகை அழுகை
எத்தனை வேண்டும் பேச
காதோரம் என்னை வழியனுப்ப
ஒற்றை வார்த்தை இருக்குதடி உனக்கு.

காடுகள் சுற்றிவிட்டு
காதலி பேசும் நொடியில் வருகிறேன்
எத்தனை காலம் வேண்டும் சொல்லிவிடு
நான்  உறங்க போவதற்கு முன்.










No comments:

Post a Comment