Tuesday 24 October 2017

மெய்யன்பு

நடு ஜாமத்தில் திரிந்திடும்
தனிமை தென்றலே
என் காதலின் வலி கேட்பாயா?

மற்றொரு தருணம் அறிந்திடாத பொழுது
உடனிருப்பதாய் சத்தியம் செய்தவள்
கண்டங்கள் கடந்த பின்னும்
எனக்காக விழித்திருந்தவள்
இன்று கேட்கிறாள்
என் காதலின் மெய்நிலை கணக்கு.

பாதையில் ஐயமெனில்
சேரும் வழி பிணக்கு
கனவினில் ஐயமெனில்
விழியினில் தூக்கம் குறுக்கு
அவளுக்கு என் காதலே ஐயமெனில்
இன்னும் இவ்வுயிர் எதற்கு?

அவளை தேடி வந்ததும்
என் காதல்
தாய்மையாய் நெஞ்சினில் சுமப்பதும்
என் காதல்
தழுவாது பிரிந்து புன்னகையிழந்து நிற்பதும்
என் காதலே

என்னை வினவும் முன்
ஒரு கணம் கூர்யிட்டு கிழித்திருக்கலாம்
மனம் தவித்திடுமுன்
உடல் மரித்திருக்கும்

போதும் தென்றலே
உடல் சார்ந்த வலியும்
சுடும் தீ தனிமையும்
ரணம் கிழிக்கும் கேள்விகளும்
என்னுடனே மறைந்திடட்டும்
உறங்கும் விழிகளும்
உள்ளத்து அமைதியும்
என் காதலிக்கு உரித்தாகட்டும்!

No comments:

Post a Comment